வருமான வரித்துறை சோதனையையடுத்து பரமேஸ்வரா உதவியாளர் மர்ம மரணம்

g-parameshwara

g-parameshwara

வருமான வரித்துறை சோதனையையடுத்து பரமேஸ்வரா உதவியாளர் மர்ம மரணம்

பெங்களூரு

கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வராவுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்த நிலையில் அவரது தனி உதவியாளர் ரமேஷ் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது பெரும் பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வராக குமாரசாமி பதவி வகித்த போது கூட்டணி அரசில் துணை முதல்வராக பதவி வகித்தவர் தான் பரமேஸ்வரா. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர் அக்கட்சியில் நீண்டகாலம் பணியாற்றி வருபவர்.

இந்த நிலையில் ஜி பரமேஸ்வரா உறுப்பினராக உள்ள டிரஸ்டுக்கு மருத்துவ சேர்க்கையின் மூலமாக ஏராளமான கருப்பு பணம் குவிந்திருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, தும்கூரூ உள்ளிட்ட இடங்களில் உள்ள பரமேஸ்வராவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

ரமேஷ் மற்றும் பரமேஸ்வரா

இதுபோலவே கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜலப்பாவுக்கு சொந்தமான கோலார் மருத்துவக் கல்லூரியிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இது போலவே மொத்தம் 25 இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனைகள் நடைபெற்றன.

இந்த சோதனை மூலமாக 5 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைபற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். மருத்துவ கல்லூரிகளில் கறுப்பு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் வெளியான தகவல் அடிப்படையில் தான் இந்த வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் பரமேஸ்வராவின் தனி உதவியாளர் ரமேஷ் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. பரமேஸ்வராவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் ரமேஷிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின் போது விசாரணை நடத்தியுள்ளனர்.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அவரது மரணத்துக்கு காரணம் என்ன? எனவும் பல்வேறு கோணங்களில் கர்நாடக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரமேஷின் மர்ம கர்நாடக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும்,சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version